வீடெங்கும் அலைந்து திரிந்து ஓடிக் கொண்டிருந்த அனன்யா குட்டியை பிடித்து அமர வைத்து இன்றைய பாடத்தை தொடங்குகிறேன் நான்... விலங்குகளின் பெயரை சொல்லி கொடுக்கும் முயற்சியில் தூரத்தில் இருக்கும் யானை பொம்மையை எடுத்து வர சொல்லிவிட்டு அவள் என்ன செய்ய போகிறாள் என்று ஒளிந்திருந்து கவனிக்கிறேன்... தனக்கே உண்டான தோரணையுடன் அமர்ந்துகொண்டு இடது கை தூக்கி யானை இருக்கும் திசை பார்த்து "இங்கே வா" என்று விரல் மட்டும் அசைத்து அழைக்கும் அவளின் அழகு கண்டு ஒரு கால் முன் வைத்து நகர தொடங்கிய யானை ஒளிந்திருக்கும் என்னைக் கண்டு தான் பொம்மை என்ற உணர்வு கொண்டு அனன்யா குட்டிக்கு "அப்புறம்" என்று சைகை காட்டிவிட்டு மறுபடியும் உறைகிறது... திரும்பி என்னை முறைத்து விட்டு யானை பொம்மை எடுக்க தவழ்ந்து செல்கிறாள் என் அனன்யா குட்டி..
பிரிவிற்கு பின்னான நம் முதல் சந்திப்பு... ஐந்து நிமிடத்தில் முடித்துக் கொள்வதென ஒப்பந்தத்துடன் தான் தொடங்குகிறது நம் பேச்சு வார்த்தை... ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் "உனக்கு நேரம் ஆகவில்லையா ?" என நானும் "நீ கிளம்ப நேரம் ஆகவில்லையா ?"என நீயும் கேட்டுக் கொண்டே தொடருகிறோம் நம் பேச்சு வார்த்தையை... நேரம் என்னவோ ஆகிக்கொண்டே தான் இருக்கிறது ஐந்து ஐந்து நிமிடங்களாய்... ஐந்து நிமிடத்தில் முடித்துக் கொள்வோம் என நாம் சம்மதித்து ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தம் மட்டும் காலாவதி ஆகிப் போனது... முதலாம் ஐந்து நிமிடத்திலேயே....
தாத்தாவின் மரணம்... சுமங்கலியை அமங்கலி ஆக்கும் சம்பிரதாயத்தில் கையில் இருக்கும் கண்ணாடி வளையல்களை உடைத்து எறிகையில் தவறி விழுந்த தங்க வளையலை எடுத்து பாட்டி கையில் கொடுக்கிறேன் நான்... "என் தங்கமே போய்ட்டாரு இது எடுக்குடா" என்று வெறி கொண்டு வீசி எறிந்துவிட்டு செல்லும் என் மூத்த பாட்டி... முப்பது வருடம் பேசாத அண்ணன் தவறிவிட்டார் என அறிந்ததும் வீட்டு வாசலிலேயே உட்கார்ந்து ஒரு சொட்டு கண்ணீரும் சிந்தாமல் "உள்ள வந்து தாத்தாவ பாருங்க பாட்டி" என கைபிடித்து அழைக்கையில் கையை தட்டிவிட்டு உஷ்ண பார்வை பார்த்து திரும்பிவிட்டு மயானம் கொண்டு செல்ல தாத்தாவை ரதத்தில் ஏற்றுகையில் நடுவில் மறித்து "கடைசி வரைக்கும் பேசாம போய்ட்டியே அண்ணா!!" என நெஞ்சில் அடித்து கதறி அழுத என் இளைய பாட்டி.. திரும்ப முடியாத கடைசி பயணத்தில் காது கிழியும் பறையை தாண்டியும் பொட்டில் அறைந்து சேதி சொல்கிறது தாத்தாவின் மரணம்.. இம்முரட்டு மனிதர்களின் வெகுளி பாசத்தை...
நண்பன் சகோதரியின் திருமணத்தில் கலந்துகொள்ள மடிவாலா பேருந்து நிலையத்தில் இறங்கி நடக்கிறேன் நான்.. நடைபழகும் குழந்தை பிடிப்பு ஏதும் இல்லாமல் தடுக்கி விழுவது போல நீ என் வாழ்வில் இன்று இல்லாத பிடியின்மையால் உன் நினைவலைகளில் தடுக்கி விழுந்து தொலைகிறேன்... இதோ இதே சாலையில் தான் கால நேரம் பார்க்காமல் என் கால்கள் உன்னுடன் பயணித்தது.. இதோ இதே ஆஞ்சநேயர் தான் பிரமச்சரியம் மறந்து நீ என்னுடன் பேசுவதை பொறாமையுடன் பார்த்தது... இதோ இந்த உணவகத்தில் தான் உனக்கு பிடித்த காபியை கடைசி சொட்டு வரை ருசி பார்த்து நீ பெருமூச்செறிந்தது... கடந்து செல்லும் பேருந்தின் பேரொலியில் கனவுலகத்தில் இருந்து நிஜவுலகம் திரும்புகிறேன் நான்... அன்று நான் விடை பெறும் தருணத்தில் "கட்டிபிடித்து அனுப்பும் பழக்கம் எல்லாம் இல்லையா??" என்ற என் வினாவிற்கு செல்லமாய் அடித்து நீ விடைகொடுத்த அதே இடத்தில் நின்று கொண்டு நகர மறுக்கிறது என் உள்ளம்... எனக்கான பேருந்தில் ஏறிக்கொண்டு ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டு இஷ்டமே இல்லாமல் பயணிக்க தொடங்குகிறது உள்ளத்தை இழந்த என் உடல்...
அழகான தருணங்களை சிறை செய்வதற்காக வாங்கபட்ட என் நிழற்பட கருவி கருவுகிறது... கடவுளால் அழகாக படைக்கப்பட்டு இருப்பதையும் மிக அழகாக காட்ட தன்னால் மட்டுமே முடிவதால் தான் கடவுளுக்கும் மேலானது என்று... அதர்மம் தலை எடுக்கும் போது எல்லாம் அவதரிக்கும் கடவுள் காதலர் தினத்திற்கு பரிசு வாங்கும் அலுவலில் இருப்பதால் ஆணவத்தை அடக்கும் பொறுப்பு என்னுடையதே ஆகிறது... காதலர் சின்னமாம் தாஜ்மஹாலின் புகைப்படமோ பனியால் மூடப்பட்ட அதிகாலை சூரியனில் தங்க முலாம் பூசப்பட்ட தாஜ்மஹாலாய் ஜொலிக்க திகைத்து போகிறேன் நான்... சிற்பகலையில் சிறந்த மாமல்லபுரத்து புகைப்படமோ பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தையும் உள்வாங்கி பேச விடாத ஊமையாய் அடிக்கிறது என்னை... என் இறுதி முயற்சியாய் உன்னை கொண்டு வந்து நிறுத்துகிறேன் என் திமிர் பிடித்த நிழற்பட கருவி முன்... சாதரண மாந்தரையே சகலரும் வியக்கும் படி படம் எடுக்கும் தனக்கு தேவதை போல் இருக்கும் உன்னை தேவமங்கையாய் காட்டுவது பெரிய விஷயமா என்று அசட்டையாய் படம் எடுக்கிறது.. சிறை செய்யபட்ட உன் அழகை கண்டு வியந்து வெற்றி புன்னகை கொண்டு உன்னை நோக்குகையில் திகைப்படைந்து நிற்கிறது என் நிழற்பட கருவி கடந்த விநாடிக்கு இந்த விநாடி உன் அழகு இன்னும் கூடி இருப்பதால்.. பார்க்க பார்க்க பரவசமூட்டும் உன் அழகை சிறைபிடிக்க இன்னும் எத்தனை முறை முயன்றாலும் தோற்றுக்கொண்டே தான் இருக்க போகிறது உன்னை உன்னை விட அழகாய் காட்டும் முயற்சியில் என் நிழற்பட கருவி...
காரணம் என்று யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்துக்காக உன்னுடன் சண்டையுடன் தொடங்குகிறது எனது விடியல்... தவறு உன்னுடையதாய் இருப்பினும் மன்னிப்பு கேட்கும் படலம் என்னுடையதாகிறது... ஆயிரம் முறை உன்னிடம் மன்னிப்பு கேட்டு உன்னுடன் பேசாத ஒரு நாளின் சோகம் உனக்கு புரிய சோக ஸ்மைலியே சோகம் கொள்ளும் அளவு நிரப்பி அனுப்புகிறேன் வரலாற்று காதல் கடிதங்களுக்கு இணையான என் குறுஞ்செய்தியை... இன்று பார்த்து வட்டியில்லா கடன் தருவதாக அழைக்கிறாள் வங்கி சகோதரி ஒருத்தி... புரியாத மொழியில் பல முறை பேசுகிறான் தவறுதலாக எனக்கு அழைக்கும் ஒருவன்... என்றும் இல்லாமல் என் நலத்தை பற்றி விசாரிக்கிறான் நெடு நாளைய பள்ளி நண்பன் ஒருவன்... ஒவ்வொரு முறை கைபேசி ஒலிக்கும் போதும் நீயாகத்தான் இருப்பாய் என்று ஆவலுடன் எடுக்கிறேன் நான்... விடியும் வரை நீளும் என் இரவுகள் நீ இல்லாததாலோ என்னவோ இன்று சூரிய அஸ்த்தமனத்திலேயே தொடங்க கனவிலாவது உன்னுடன் பேச துயில் உறங்க தொடங்குகிறேன் நான்... அதிகாலையில் எழுந்ததும் இருபத்தைந்து தவறிய அழைப்புகள் உன்னிடம் இருந்து என பறைசாற்றுகிறது என் கைபேசி... மறுபடியும் சண்டையில் தொடங்கிவிட்ட ஒரு விடியல் மறுபடியும் சோக ஸ்மைலி துணை கொண்டு தீட்ட தொடங்குகிறேன் வரலாற்று காதல் கடிதங்களுக்கு இணையான என் குறுஞ்செய்தியை...
எட்டு முறை படித்த கதை ஆகினும் உன் ஸ்பரிசம் தீண்டி வந்ததால் 9 ஆம் முறை படிக்க தொடங்குகிறேன் பொன்னியின் செல்வனை நான்... வாளேடுத்து சண்டைக்கு அழைக்கிறான் வந்தியதேவன் அரியணையை தியாகம் செய்ய தயார் என்கிறான் அருள்மொழி வர்மன் நந்தினி உன் கால் தூசு பெற மாட்டாள் என்கிறான் ஆதித்த கரிகாலன் பூங்குழலி அன்றி யாரையும் நினைக்காத சேந்தன் அமுதனும் உண்டாம் இப்போட்டியில்.... "சரித்திரத்தில் இடம் பெற்ற காதல் கதைகளை அறிவோம் நாம் சரித்திரம் ஆனவர்களே காதல் செய்து சண்டைக்கு அழைத்தால் சுயம்வரம் வைத்தா தீர்ப்பது இப்பிரச்சனையை...???" என்று புலம்புகிறேன் நான் உன்னிடம்.... "வைக்க சொல்லேன் சுயம்வரம்!! நான் யாருக்கு மாலையிடுவேன் என்று உனக்கு தெரியாதா??" என்று என்னை கட்டிபிடித்து முத்தமிடுகிறாய் நீ... இறந்த பின்பு எப்படி தற்கொலை செய்து கொள்வது என்று தேடி அலைகிறார்கள் காதல் தோல்வியுற்ற என் சரித்திர நாயகர்கள்... :):)
சாலையைக் கடக்கும் போது அடிப்பட்டு கிடக்கும் உயிரைக் கண்டும் -"அலுவலகத்திற்க்கு நேரமாகி விட்டதே" என விரையும் போதும்... கூனிக் குறுகி கை நீட்டி பிச்சை கேட்கும் மூதாட்டியைக் கண்டும் காணதவாறு தலையை திருப்பிக் கொள்ளும் போதும்.... பிளாட்பாரத்தில் படுத்து இருக்கும் குழந்தைகளைக் கண்டு "அனைத்துக்கும் காரணம் அரசின் பொறுப்பின்மையே" என அடுத்தவர் மீது பழி சுமத்தி நீங்கள் தப்பித்துக் கொள்ளும் போதும்... சிறிதேனும் குற்ற உணர்ச்சி ஏற்பட்டால் வருந்த தேவை இல்லை... இவை அனைத்தையும் கண்டுவிட்டு முகபுத்தகத்தில் மட்டுமே பதிவேற்றம் செய்து குற்ற உணர்ச்சியை களைந்து செல்லும் என்னை போல் சராசரி இந்தியர்களில்
வலைவீசி தேடுகிறார் உன் தந்தை... அடுத்தடுத்து நடந்த இரு விபத்துக்களால் அரசினரால் உன் வீடு முன்பு வைக்கப்பட்ட "ஆபத்து நிறைந்த பகுதி" எனும் பலகையில் "அழகு நிறைந்த பகுதி" என்று திருத்தம் செய்த என்னை...!!
ஐயாயிரம் ரூபாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி நூறு ரூபாய் டிப்ஸ் கொடுத்தபோது எல்லாம் புரியாத பணத்தின் அருமை... சிக்னலில் கரையும் வினாடிகளில் இரு கால்களும் இல்லாமல் தவழ்ந்து வந்து கையேந்தும் பிச்சைகாரனுக்கு பத்து ரூபாயை எடுத்துப் பார்த்து "சில்லரை இல்லப்பா!!!" எனும் போது புரிகிறது மிகத் தெளிவாக....